உக்ரைன் மீதான ரஷ்யாவின் வலிந்த படையெடுப்புக்கு எதிர்வினையாற்றும் வகையில் ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர்கார்ட் (Visa and Mastercard) இலத்திரனியல் பணப் பரிமாற்ற அட்டை செயற்பாடுகளை இடை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிஜிட்டல் பணப் பரிமாற்ற நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அல்பிரட் கெல்லி இதனை அறிவித்துள்ளார்.
வரவிருக்கும் நாட்களில் பரிவர்த்தனைகளை துண்டிக்கப்படும். அதன் விளைவாக ரஷ்யாவில் வழங்கப்பட்ட அட்டைகள் வெளிநாடுகளில் வேலை செய்யாது. அத்துடன், வெளிநாடுகளில் வழங்கப்பட்ட அட்டைகளும் ரஷ்யாவில் வேலை செய்யாது என விசா பணப்பரிமாற்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் வலிந்த படையெடுப்பு மற்றும் நாங்கள் கண்ட ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளைத் தொடர்ந்து இவ்வாறான தடையை அமுல்ப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிஜிட்டல் பணப் பரிமாற்ற நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அல்பிரட் கெல்லி அறிவித்துள்ளார்.
இத்தடை மூலம் ரஷ்யாவிலும் உலகிலும் உள்ள எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள், வணிகர்கள் மற்றும் பலர் மீது ஏற்படுத்தும் தாக்கங்களுக்கு வருந்துகிறோம்.
இந்தப் போர் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகும். இதற்கு எங்கள் இவ்வாறான செயற்பாடு மூலம் பதிலளிக்க வேண்டியுள்ளது எனவும் அல்பிரட் கெல்லி கூறினார்.
மாஸ்டர்கார்ட் இதேபோன்ற தடையை அறிவித்துள்ளது. ரஷ்ய வங்கிகளால் வழங்கப்பட்ட அட்டைகள் இனி செயற்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த முடிவை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மாஸ்டர்கார்ட் ரஷ்யாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயற்பட்டு வருகிறது எனவும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மாஸ்டர்கார்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.